கே.எம்.சி.ஹெச் சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

கே.எம் .சி.ஹெச் மருத்துவமனை சார்பாக கோவை மாநகர பெண் காவலர்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் கூட்ட அரங்கிலும் மற்றும் போலீஸ் பயிற்சி பள்ளி கூட்ட அரங்கிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் உமா,    கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் கதிரியக்க துறையின் நுண்துளை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மேத்தியூ செரியன், மார்பக சிகிச்சை மையத்தின் நிபுணர் மருத்துவர் ரூபா மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பெண் காவலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மார்பக சிகிச்சை மையத்தின் நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது:

மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில் தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், தொடக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி(வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக் காம்புகளில் கசிவு, மார்பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, இரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பாக சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம். மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்து விட்டது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவ குழுவினரை கொண்ட மார்பக பரிசோதனை சிகிச்சை மையம் ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது என்று கூறினார்.