இரண்டு முறைக்கு மேல் பணம் வசூல் : சுங்கச்சாவடி முற்றுகை

கோவை எல்என்டி சுங்கச்சாவடியில் இரண்டு முறை சுங்கவரி வசூல் செய்வதை கண்டித்து வாகன ஓட்டிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை நீலம்பூர் பகுதியிலிருந்து மதுக்கரை வரை உள்ள சுங்கச்சாவடிகளை எல்என்டி நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

ஆறு இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து வாகனங்களும் பாஸ்ட்ராக் முறையில் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் நீலாம்பூர் மதுக்கரை இடையே கடக்கும் வாகனங்களில் இரண்டு அல்லது மூன்று தவணைகளில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், 60 ரூபாய் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு 600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து சுங்கச்சாவடியில் கேட்டால் உரிய பதில் இல்லை என்று கூறும் லாரி ஓட்டுநர்கள் இதனை கண்டித்து திடீரென மதுக்கரை எல்என்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதிகமாக பிடித்த பணம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்ப வழங்கப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.