நெருக்கம் இல்லாவிடினும் அளவு கடந்த பாசம்!

-ஆர். பாலசந்தர், நிர்வாக இயக்குனர், ஹோட்டல் ஹரிபவனம்

கடந்த 50 வருடமாக ஹரிபவனத்தை நடத்தி வந்த என் தந்தை எஸ்.ராஜு மிகவும் பணிவான, கண்ணியமான, நேர்மை குணம் கொண்டு தர்மத்தை காக்க கூடியவர்.

நான் என் தாயாரை சிறுவயதிலே இழந்ததால், அன்றிலிருந்து அவர் தான்  எனக்கு தாயாகவும், தந்தையாகவும்,  காவலாளியாகவும், எல்லா உறவுமாகவும் இருந்து, குலதெய்வமாக குடும்பத்தை காப்பாற்றியதோடு,  தனிமனிதராக போராடி அவருடைய கடமைகளை சரிவர செய்தார்.

நான் உணவு தொழிலுக்கு வந்தபோது எனக்கு போதுமான ஆதரவை வழங்கினார்.  தொழிலை கற்றுக் கொடுத்ததோடு, அதற்கு உறுதுணையாக இருந்து, இன்றளவும் தொழிலை சரியாக செய்வதற்கு காரணமாக இருப்பது அவர் போதித்த தார்மீக மந்திரங்களே. எதை செய்தாலும் அதில் கடுகளவாவது தர்மம் இருக்க வேண்டும் என்று கூறி, அது மட்டும்தான் உன் தொழிலையும், உன் பிள்ளைகளையும் காப்பாற்றும் என கூறுவார்.  இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முழு காரணம் என் தந்தை மட்டுமே.

தந்தையின் குணம் எப்பொழுதும் நம்மை கண்டிப்பது மாறியாகத்தான் இருக்கும். செய்த தவறுக்கு பின்னால்  என்ன காரணம் உள்ளது, அந்த தவறை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,  தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும் என சில நேரங்களில் நம்மை கண்டிப்பார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது போல வெற்றிக்கு உறுதுணையாக தந்தையின் சொல்லே  இருக்கும்.

தான்பட்ட சிரமங்களை எல்லாம் தன் மகன் படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். எல்லா அப்பாக்களும் மகன்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை என்றாலும் அளவு கடந்த பாசத்தை கொண்டிருப்பார்கள்.

என் அப்பாவுடன் நான் மிகவும் மகிழ்வாக உணர்ந்த தருணம், “நான் புதிதாக ஒரு வீடு கட்டி, அதில் குடியேறிய போது அன்று என்னுடன்  அமர்ந்து சாப்பிட்டு, நீ சாதித்து விட்டாய் என்று சொல்லாமல் சொல்லி அவரது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது”.

கடந்த 50 வருடமாக ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுத்தது கிடையாது. உணவை வீணடிக்க கூடாது என்பதில் மிக கண்டிப்பாக இருப்பதோடு, அன்னத்தை அவரைப் போல பரிமாறி இதுவரை நான் கண்டதில்லை. பல பேரின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ள அவரைப் போல இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வரக்கூடிய காலங்களில் அதை பின்பற்ற வேண்டும் என எண்ணுகிறேன்.