என் வளர்ச்சிக்கு அவர் உறுதியான  தூண் !

டாக்டர் தாமோதர் ராவ், இணை இயக்குனர், ராவ் ஹாஸ்பிட்டல்

ஒரு நல்ல தந்தையை  இந்த சமுதாயம்  கவனித்ததோ, பாராட்டியதோ, வாழ்த்தியதோ கிடையாது, அப்படி இருந்தும் இந்த சமுதாயத்தில் அதிக மதிப்பை கூட்டக்கூடிய நபராக அவர் திகழ்கிறார்.

பிறரிடம்  என் தந்தை  டாக்டர் எஸ்.ஆர்.ராவ் மிகவும் மகிழ்ச்சியாக இனிமையாக பழகக்கூடியவர், ஆனால் என்னை அவர் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார். எனக்கு விவரம் தெரிந்த பிறகுதான் நான் சிறந்த நிலையை அடையவே அவர் என்னை அப்படி கண்டித்து வளர்த்தார் என்பது புரிந்தது.

ஒரு லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணராக துவங்குபவர்கள் தனக்கான சிறந்த  வழிகாட்டியை, ஆசானை தேடி பல மையில்கள் கடந்து செல்வர், ஆனால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஏனென்றால் இந்த கோவை நகரில் அவர்தான் முதல் லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர். எனக்கு அவர் நல்ல வழிகாட்டியாக இருந்தார்.

நான் என் பணியை துவங்கிய முதல் ஏழு எட்டு ஆண்டுகளில், நான் அறுவை சிகிச்சை செய்யும் போது, எந்த குறுக்கீடும் செய்திடாமல் அவர் ஆபரேஷன் தியேட்டர் வெளியே அமர்ந்திருப்பார். வெகு சில தருணங்களில் எனக்கு ஏதாவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அதை நான் கேட்டால் மட்டும் வழங்குவார்.

அவரின் இந்த அணுகுமுறை என்னுடைய சொந்த  அறுவை சிகிச்சை முறையை உருவாக்கிட வழிவகுத்தது. என் வளர்ச்சிக்கு வலுமையான தூணாக அவர் விளங்கியுள்ளார். இதை இந்த கடைசி 10 ஆண்டுகளில் நான் அதிகம் உணர்ந்துள்ளேன்.

என் வாழ்க்கையிலும் எனக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் தான் அறிவுரை வழங்குவார். நான் இவை அனைத்திற்கும் அவருக்கு நன்றி சொல்லிட கடமைப் பட்டுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன் எனக்கும் என் மனைவி தீபிகாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு தந்தையாக இப்போது மிகுந்த மகிழ்ச்சி, அத்துடன் அதிக பொறுப்பு உள்ளதை உணர்கிறேன். ஒரு குழந்தை வாழ்க்கையில் வந்த பின் வாழ்க்கையை நான் பார்க்கும் விதம் மாறியுள்ளது.

ஆண்களால் தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்து விடமுடியும் ஆனால் நல்ல தகப்பன் என்ற நிலையை அடைய அதிக தியாகம், பொறுப்பு, உழைப்பு வேண்டும்.