கோவை மாவட்ட புதிய ஆட்சியராக சமீரன் பொறுப்பேற்பு

கோவை மாவட்ட புதிய ஆட்சியர் கீ.சு.சமீரன் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். கொரோனா தொற்றை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தொற்று விகிதத்தை தரை மட்டத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கடந்த மாதம் 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று முதலமைச்சரின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது. இதற்கு கோவை பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். மேலும் பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தற்பொழுது ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ள நிலையில் கூடிய விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.