800 கிராம் குழந்தைக்கு துளை திறவுகோல் சிகிச்சை செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

குறைப்பிரசவத்தில் பிறந்த 800 கிராம் எடை கொண்ட குழந்தைக்கு  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத்தொடங்கியதால் துளை திறவுகோல் சிகிச்சை செய்து குழந்தையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 6.5 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் கடந்த மார்ச் மாதத்தில் பிறந்தன. முதல் குழந்தை 800 கிராம் எடை மட்டுமே இருந்தது. இந்த குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய் முற்றிலும் அடைபட்டிருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது.

இரண்டாவது குழந்தையை இழந்த பின்னர், இந்த ஒரு குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என பெற்றோர் விரும்பினர். ஈரோட்டிலிருந்து இந்த குழந்தை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, குழந்தைகளின் உயிர் காக்கும் கருவிகளான இன்குபேட்டர், வெண்டிலேட்டர் கொண்ட ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திலேயே குறைபிரசவ குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சைக்கான கருவிகளுடன் ஆம்புலன்ஸ் வசதி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் தான் உள்ளது.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தையை, மருத்துவர்கள் சித்தார்த்த புத்தவரபு, சுஜா மரியம் மற்றும் செவிலியர்கள் குழு பாதுகாத்தனா்.

குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத்தொடங்கியதால் உடனடியாக துளை திறவுகோல் சிகிச்சை செய்து குழந்தையைக் காக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். வழக்கமாக திறப்பு வால்வுகள் 5 மி.மீ.,அளவு உள்ளதாக இருக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு 1 மி.மீ.,மட்டுமே இருந்தது இருப்பினும் குழந்தைகள் நல இருதய சிகிச்சை மருத்துவர் தேவபிரசாத், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் மேனன், மருத்துவர் மணிகண்டன், கதிரியக்கவியல் மருத்துவர் முத்துராஜன் ஆகியோர் இணைந்து, நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து மிகவும் சிக்கலான, நுண்ணிய அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் எஸ்.தேவபிரசாத், சித்தார்த்த புத்தவரபு, சுஜா மரியம் ஆகியோர் தெரிவிக்கையில், “இத்தகைய குறைந்த எடையில் உள்ள சிறிய அளவிலான சிசுக்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது  மிகவும் அரிதானது. பெரும்பாலும் இதுவரை 1.2 கிலோ முதல் 1.5 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சர்வதேச அளவில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் எடை குறைவான குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். குழந்தையின் எடை 1.4 கிலோவாக உயர்ந்த பின், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்,” என்றனர்.