விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது – முதல்வர் மு.க ஸ்டாலின்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கறது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

விலை உறுதி மற்றும் பண்ணை சேவை சட்டம், வேளாண் உற்பத்தி  வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தை துவங்கி இன்றுடன் ஆறு மாதம் காலம் நிறைவு பெறுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இவற்றை ரத்து செய்திட அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.