“மீயூகோர்மைகோஸிஸ் தொற்றுநோய் கிடையாது”

கொரோனாவால் ஏற்படும் பூஞ்சை பாதிப்புகளை நிறங்களின் பெயரால் குறிப்பிட வேண்டாம் என்றும், கொரோனாவை போல இந்த பூஞ்சை பாதிப்புகள் ஒருவரிடமிருந்து மற்றோர் நபருக்கு பரவுவதில்லை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் கலீரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு, கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை தொற்று பரவலாக உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொற்று மியூகோர்மைகோஸிஸ் என சொல்லப்பட்டாலும் கூட, கருப்பு பூஞ்சை தொற்று என்றே அதிகம் பேரால் குறிப்பிடப்படுகிறது.

கருப்பு – வெள்ளை பூஞ்சைகளைத் தொடர்ந்து, மஞ்சள் தொற்று நேற்று, நோயாளி ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நோய் பாதிப்பு குறித்து அவர் கூறுகையில்:

வெவ்வேறு நிறங்களை கொண்டு பூஞ்சை பாதிப்புகளை குறிப்பிடுவது, மக்களிடையே தொற்று பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தும் எனக்கூறி, தொற்றை அதன் பெயரால் குறிப்பிடவும் என கூறியுள்ளார். மேலும், கருப்பு பூஞ்சை தொற்று என்ற வார்த்தைக்கு பதிலாக, மியூகோர்மைகோஸிஸ் என்று குறிப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பூஞ்சை தொற்றுகளில், பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் மியூகோர்மைகோஸிஸ், கேன்டிடா மற்றும் அஸ்பெர்ஜிலோஸிஸ் வகை பாதிப்புகள் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் நபர்களின் உடலில் கண்டறியப்படுகிறது. இவற்றைத்தான் கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பூஞ்சைகள் என குறிப்பிடப்படுகின்றன.

பூஞ்சை தொற்றுகளில், ஒவ்வொரு தொற்றும், அது பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிக்கேற்ப நிறத்தை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்ளும். அப்படியிருக்கும் போது நோயை, அதன் பாதிப்புகளின் வழியாக பிரித்து கூறுவதே சரியாக இருக்கும். அதற்கு அதன் நிறத்தை குறிப்பிடாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால், வீண் குழப்பமும் வதந்திகளும் ஏற்படக்கூடும் எனக் கூறியுள்ளார்.

இவற்றில் மியூகோர்மைகோஸிஸ் வகை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளனர். எனினும் இந்த பூஞ்சை பாதிப்பு, கோவிட்  தொற்றுநோய் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதில்லை.

அதேபோல கொரோனா பாதித்தோருக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் தெரபிக்கும் இந்த தொற்றுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இந்த மியூகோர்மைகோஸிஸ் பாதிக்கப்பட்டவர்களில், 90 முதல் 95 சதவிகிதம் பேர், சர்க்கரை நோயாளிகளாகவோ, ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டவர்களாகவோ இருக்கின்றனர். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு, மியூகோர்மைகோஸிஸ் பாதிப்புக்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கிறது.

மியூகோர்மைகோஸிஸ் அறிகுறிகளாக, ஒருபக்க முகம் மட்டும் வீங்குதல், தலைவலி, மூக்கு அல்லது சைனஸ் பகுதியில் வலி, வாயின் மேற்பகுதி அல்லது மூக்குப் பகுதியில் கருப்பு நிறத்தில் அடுத்தடுத்து புண், காய்ச்சல் போன்றவை உள்ளன. அதேபோல மீயூகோர்மைகோஸிஸ், நுரையீரல், கண்கள், இரைப்பை, குடல், மூளை போன்ற பகுதிகளை பாதிக்கும்.

இவை பல உடல் உறுப்புகளை பாதிக்கிறது என்றபோதிலும், எந்தப் பகுதியை இது பாதிக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, அது பிரிக்கப்படுகிறது.

கேன்டிடா (வெள்ளை பூஞ்சை) பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, வாய், நாக்கு, வாய் துவாரங்களில் வெள்ளை திட்டுகள் அறிகுறிகளாக ஏற்படும். உடலின் ரத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளார்.

 

தகவல்: புதிய தலைமுறை