நடமாடும் காய்கறி வாகனங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கோவை ஒசூர்  சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகம் முன்பு  வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்பட உள்ள இந்த நடமாடும் வாகனங்களை  தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் – பழங்கள் வழங்கவும் வேளாண் தோட்டக்கலை துறை சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் தலா 10 நடமாடும் வாகனங்கள் என 50 வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் மட்டுமின்றி, கோவை நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் செயல்பட உள்ளது.

இந்நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்பட உள்ள நடமாடும் வாகனங்களை  தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து,  தொடர்ந்து 2  வார்டுக்கு ஒரு கிருமிநாசினி தெளிப்பு எந்திரம் என 50 எந்திரங்களையும் துவக்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உடனிருந்தனர்.

இது குறித்து, அமைச்சர் சக்கரபாணி பேசுகையில்: கோவையில் முழு ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் வீட்டின் அருகில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 106 வகையிலான காய்கறிகள், பழங்களை மாநகராட்சி சார்பில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்த நபர்கள் குறித்து புகார்கள் பெறாத காரணத்தால் நடவடிக்கை ஏதுமில்லை என  தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி வீட்டில் இருக்க வேண்டும் எனவும் இந்த நோய் தொற்றை முழுமையாக விரட்டுவதற்கு கோவை மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.