தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!

கோவையில்  கொரோனா தொற்று  அதிகரிக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இன்று முதல் கோவையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இதனிடையே வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் போடுவதற்கான டோக்கன் வாங்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 350 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த ஒரு மையத்தில் மட்டுமல்லாது, கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.