புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய முடியை தானம் வழங்கிய பெண்கள்

கோவையில் புற்றுநோயாளிகளுக்கு  “விக்” செய்வதற்காக முடி தானம் செய்யும்  விழிப்புணர்வு நிகழ்வில் பெண்கள் பலர் தங்களது முடியை தானம் வழங்கினர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை மாநகரம் முழுதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள மாலில் UUU என்கிற தனியார் அமைப்பு புற்றுநோயாளிகளுக்கு “விக்” செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், இல்லத்தரசிகள், பணிக்கு செல்பவர்கள் என 40 பெண்கள்   முடிதானம்  செய்தனர். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், பெரு நிறுவனங்கள் மத்தியில் முடிதானம் குறித்து  விழிப்புணர்வை கொண்டு செல்லும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியானது தனியார் நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முடிதானம் செய்தனர். புற்றுநோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் இயல்பாக நடக்கும் என்றாலும், அது நோயாளிகளை பாதிக்கும். இந்நிலையில் தானமாக பெறப்படும் முடியை கொண்டு, செயற்கை கூந்தல் (விக்) தயாரித்து குறைவான விலையில் புற்றுநோயாளிகளுக்க கொடுக்கும் போது அது அவர்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. முடிதானம் அளிக்கும்  மாணவிகளிடம் இருந்து 8 முதல் 14 அங்குலம் முடி தானமாக வெட்டி எடுக்கப்படுகின்றது. தானமாக பெறப்படும் முடி, சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழவது முதல் முறையாக கோவையில் நடைபெறுகிறது.