மேட்டுப்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்தியாளர் பயணம்

கோவை, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இச்செய்தியாளர் பயணத்தின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் சாந்தமணி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், நகராட்சி பொறியாளர் கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதிகள், குடிசை வீடுகளை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுகாதார வசதிகளை மேம்படுத்திட சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.91.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி, நில அமைப்புப்படி 6கழிவு நீர் சேகரிப்பு மண்டலமாக  பிரிக்கப்பட்டு, 8 கழிவு  நீருந்து நிலையங்கள் மூலமாக 14 இடங்களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சிக்கதாசம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  79.64 கி.மீ தூரம் கழிவு நீர் சேகரிப்பு குழாய்கள், 3,319 ஆள் இறங்கு குழிகளுடன் அமைக்கப்பட்டு, 17,000 வீட்டு இணைப்பு வழங்கப்பட உள்ளது. கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் 61 சதவீதமும், 8.65மில்லியன் கனலிட்டர் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் 83 சதவீதம் முடிவடைந்துள்ளது. இத்திட்டப்பணிகள் நிறைவடையும் பொழுது, இந்நகராட்சியில் உள்ள 33 வார்டுகளை  சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பயனடைவதுடன், முழு சுகாதாரமான நகரமாக  மேட்டுப்பாளையம் நகராட்சி உருவாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.