லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் “லஞ்சம் வாங்காதே, லஞ்சம் வாங்கியவர்கள் நிம்மதியாக உறங்கியது இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சி ஊழியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர், ஊழலில்லா நிர்வாகத்தை தர வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற காலங்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாநகராட்சி சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும், அந்த குழுவின் மூலம் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கின்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும், அரசு கூறிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் கடையை ஓரிரு நாட்கள் அடைக்க உத்தரவு பிறப்பிக்கபடும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி ஆகியோர் உடனிருந்தனர்.