ஆட்சியர்  தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.09.2020) சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், சட்டம் என்பது ஒரு சமூகம் ஒழுங்கை நிலைநிறுவத்துவற்கும் தனிநபர்களுக்கு பாதுகாப்பை வழங்குதற்கு அமைக்கும் விதிகளின் அமைப்பு ஆகும்.

அதனடிப்படையில், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சட்ட ஒழுங்கை மேலும் சீராக்க  பாதுகாப்பு அதிக தேவைப்படும், பகுதிகளில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து  பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் சாலைகளில் தேவையான இடங்களில் டிராபிக் சிக்னல், மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதச்சாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள்,  ஆகியவை அமைக்கப்படவேண்டும். அதேபோலவே ஏற்கனவே அமைக்கபட்டுள்ள சாலைகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை விரைவாக சரி செய்யவேண்டும். சிக்னல் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்மந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துகளால் பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளை குறைக்கும் விதமாக மக்களிடையே போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக்ராஜா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அனிதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.