7 நாட்களுக்கு நகைக்கடைகள் மற்றும் பட்டறைகள் மூடல்

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் இன்று (1.9.2020) முதல் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மூடப்படுகின்றன.

கோவை மாவட்ட நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள 350 நகைக்கடைகளில் தினசரி சராசரியாக ரூ.50 கோடிக்கு வியாபாரம் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் தினமும் பதிவாகும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதை கருத்தில் கொண்டு நகைக்கடைகள் மற்றும் பட்டறைகளை இன்று முதல் 7-ம் தேதி வரை மூட மேற்கண்ட சங்கத்தினர் முடிவு செய்து, இன்று முதல் பின்பற்றி வருகின்றனர். அரசு அறிவித்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் நகைக்கடைகளில் பின்பற்றப்பட்டு வந்தாலும், நகைக்கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தோடு வரும்போது, தனிநபர் இடைவெளி பின்பற்றி அமர்ந்து நகைகளை பார்க்குமாறு கூறினால் சங்கடப்படுகிறார்கள்.

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க முடியாத காரணத்தினால் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நகைக்கடைகளை இன்று முதல் மூட முடிவு செய்யப்பட்டு, பின்பற்றி 7 நாட்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு, 7 நாட்கள் கடைகள் மூடப்படும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.350 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.