முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மனு அளித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (1.9.2020) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்தும், அதனை ரத்து செய்ய கோரியும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மனு அளித்தனர்.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா பேசுகையில், ‘மறைந்த அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்தார். மேலும் இந்த அரசு அம்மாவின் அரசு என திரும்பதிரும்ப தமிழக முதல்வர் உள்ளிட்டு அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால் நீட்தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு திணிக்க முயல்கிற போது அதனை எதிர்க்க துணிவில்லாமல் உள்ளது. எனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  உருவப் படத்திற்கு மனு அளித்துள்ளோம்.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், நீட் தேர்வு நடத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய மன் கி பாத் உரையில், நீட் தேர்வு குறித்து பிரதமரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் அதிகமாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.