செயற்கை கால் தயாரித்து பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு செயற்கை கால் தயாரித்து பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அவனது வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த வாகன விபத்தினால் பலர் கால்களை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

விபத்தில் சிக்கும் நபர்களை செயற்கைக்கால் பொருத்த சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் மதிப்பில் செயற்கை கால் தயாரிக்கும் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறையின் தலைவர் வெற்றிவேல் செழியன் பேசுகையில், செயற்கை அங்கம் தயாரிக்கும் துறை ஏற்படுத்தப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

ஒருவருக்கு செயற்கை கால் ஒன்று தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செயற்கை கால் தேவைப்படுவோர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் தங்களின் பெயர்களை ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மற்றும் காப்பீடு அட்டை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த செயற்கை அங்கம் பொருத்தும் சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். இதற்கென 10 படுக்கைகளுடன் வார்டு ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எடை குறைவாக தயாரிக்கப்படுவதால் எளிதில் நடந்து செல்ல முடியும். இது தவிர செயற்கை பொருத்தப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் அளிக்கவும் வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.