தனியார் மருத்துவமனைகள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

– மாவட்ட இணை இயக்குநர் கிருஷ்ணா

கோவை மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளவேண்டும் என இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மருத்துவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஆய்வுகள் மாவட்ட இணை இயக்குநரால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடனாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதை கண்காணிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் நுழைவாயிலில் நன்கு கைகழுவ தண்ணீர் இணைப்புடன் அமைத்திட வேண்டும். கைகழுவ தேவையான சோப்பு மற்றும் சோப்பு ஆயில் கண்டிப்பாக வைத்திருத்தல் வேண்டும். கைகழுவும் வழிமுறைகளை விளக்கப்படமாக கைகழுவுமிடத்தில் வைக்கவேண்டும். மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கைகழுவிய பின்பு உரிய கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை தூய்மைப்படுத்திய பின்பே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

மருத்துவமனையின் நுழைவு வாயிலில் நோயாளிகள் உதவி மையம்  ஏற்படுத்தி 24/7 நோயாளிகளுக்கு உரிய தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். நோயாளிகள் மற்றும் அவருடன் வரும் உதவியாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்திருத்தல் வேண்டும்.

நோய் தொற்று தடுத்தல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் தெரியும்படியான இடங்களில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும், வழிகாட்டி பலகைகள் கண்ணில் தெரியும்படி வைத்திருத்தல் வேண்டும்.

காய்ச்சல் பகுதி மற்றும் கொரோனா பரிசோதனை பகுதி தனியாக அமைத்திருத்தல் வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிய பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி மருத்துவ கழிவுகளை சேகரித்து வகைப்படுத்தி அரசு பதிவு பெற்ற மருத்துவ கழிவுகளை எடுத்துச் செல்லும் நிறுவனத்திடம் உரிய பாதுகாப்பு விதிகளின்படி ஒப்படைத்தல் வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு அரசு நிர்ணயித்துள்ள கிருமிநாசினிகள் கொண்டு முழு மருத்துவமனையை தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா நோய் பரிசோதனை செய்யவில்லை என்று முதலுதவி செய்யாமல் உடனே திருப்பி அனுப்பக் கூடாது. முதலுதவி செய்து உரிய மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். இதன் விபரங்களை மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆகியோருக்கு கண்டிப்பாக தெரியப்படுத்தல் வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களை மீறும்பட்சத்தில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துல்) சட்டம் 1997 விதிகள் 2018-ன்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.