அரியவகை கல்லீரல் நோய் -குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

ஒன்றரை வயது குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, மருத்துவ துறையில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.

‘பிலியரி அட்ரேசியா’ எனப்படும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிறவி நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தையின் பெற்றோர் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்ய இயலாது எனப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பெரியவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட முழுக் கல்லீரலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முழு கல்லீரலும் குழந்தைக்குப் பொருந்தாது என்பதால் ஒரு சிறிய பகுதி குழந்தைக்கும், கல்லீரல் செயலிழந்த மற்றொருவருக்கும் பெரிய பகுதி கல்லீரல் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மூளைச்சாவு அடைந்தவர் ஒரே நேரத்தில் கல்லீரல் செயலிழந்த 2 உயிர்களைக் காப்பாற்றியதோடு உடல் உறுப்பு தானத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகள் மயக்க மருந்து நிபுணர் மற்றும் பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சை நிபுணர்களைக் கொண்ட குழு இச்சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில்,‘இது மிகவும் சவாலான ஒரு அறுவை சிகிச்சை. மயக்க மருந்து நிபுணர், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என எங்கள் மருத்துவ குழுவினர் குழந்தையின் உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வெற்றிகரமாகச் சிகிச்சையை நடத்தி முடித்துள்ளோம். குழந்தை தற்போது பூரண குணமடைந்துள்ளது. இருப்பினும், தொடர் மருத்துவர் கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தை வளர்ந்த பிறகும், திருமணம் போன்ற இயல்பான வாழக்கைமுறையைத் தொடர்வதில் சிக்கல்கள் ஏற்படாது’என்றனர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை சேவைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு உயிர் காக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை உலகத் தரத்திற்கு நிகராக இலவசமாக பெற சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்லாமல் இங்கேயே மேற்கொள்ள முடியும் என்பதை மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.