`சாமானியராக இருந்து சாதித்தவர்’ -எஸ்.பி.வேலுமணி

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பிரதமர், தமிழக முதல்வர், திரை துறையினர் உட்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் மறைந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் துக்கமான செய்தி எனவும் விஜயகாந்த் ஒரு சாமானியராக இருந்து மிகப்பெரிய அளவில் பல படங்களில் நடித்து நடிகர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கழகத்தை ஆரம்பித்து சிறப்பான முறையில் பணியாற்றி அம்மா (ஜெயலலிதா) உடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர் எனவும் கூறினார். இந்நிலையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகவும் வருந்ததக்கது எனவும் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் திரை துறையினருக்கும் இரங்கல் தெரிவித்து இறைவன் அவர்களுக்கு தைரியத்தை தர வேண்டும் என தெரிவித்தார்.