தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன்  கோவை அரசு மருத்துவமனை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக் குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.  அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், அவசர பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்,  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து தீர்வுக்கான வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அந்த அடிப்படையில் முதல் மாவட்டமாகக் கோவை வந்துள்ளதாகவும் 110 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ல், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட பல்அடுக்கு கட்டிட பணிகள் வரும் ஜனவரி பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என பொறியாளர்கள் கூறியுள்ளனர் என்றார். மேலும் தமிழக முதல்வர் மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் 4500 வெளி நோயாளிகள், 1,509 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவிற்கு பெரிய மருத்துவமனையாக உள்ளது என கூறிய அவர் தற்போதைய புதிய கட்டிடமும் பல்வேறு அதிநவீன கருவிகள், வசதிகளுடனான மருத்துவமனையாக, தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் செயல்படும் என தெரிவித்தார்.

மேலும் இரண்டு மருத்துவமனைகளை இணைக்கும் பாலம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் எனவும்  அது குறித்து பரிசீலனை செய்து கட்டிக் கொடுக்கப்படும் என்றார். அதுமட்டுமின்றி, தினம் தோறும் இருதய அறுவை சிகிச்சை செய்ய தேவையான வசதிகளைச் செய்ய இக்குழு பரிந்துரை செய்ய உள்ளாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மதிப்பீட்டுக் குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.