கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துரை வழங்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி

கோவை தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் தலைமையில் கோவையில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த சூழலில், இன்று விழா அரங்கத்திற்கு வந்த வானதி சீனிவாசனுக்கு விழா மேடையில் இருக்கை வழங்கப்பட்டு வாழ்த்துரை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகராக கோவை உள்ளது. தொழில் நுட்பத்திற்கும் பெயர் பெற்ற ஊராக கோவை உள்ளது. ஒரு பிரச்சனை என்றால் அரசு வருவதற்குள் பல்வேறு சமூக அமைப்புகள் மக்களுக்கு உதவும் ஊராக கோவை உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் அரசு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க உதவும் தமிழக அரசுக்கு நன்றி. தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.