பல இதயங்களின் இதயமாக பி.எஸ்.ஜி மருத்துவமனை

மாற்றம் பெற்று வரும் உலகில் நோய்களும் தங்களை ஒவ்வொரு விதமாக புதுப்பித்துக் கொண்டே வருகின்றன. என்னதான் நவீனமயமான உலகமாக இருந்தாலும் உடலில் ஒரு பாதிப்பு என்றால் அது அக்குடும்பத்தையே மிகவும் கவலையில் ஆழ்த்தி விடும். அதிலும் இதயம் தொடர்புடைய நோய் எனில் ஒவ்வொரு நிமிடமும் பயமும் பதட்டமும் அதிகரிக்கும்.

ஆனால் நம் பயத்தைப் போக்கும் வகையில் பல புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில், முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான பி.எஸ்.ஜி மருத்துவமனையும் இந்த இருதய மருத்துவ சிகிச்சையில் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இங்கு அளிக்கப்படும் அதிநவீன சிகிச்சை முறையினாலும், திறமைமிக்க மருத்துவக் குழுவினராலும் பல இதயங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதய நோய்களுக்கு அளிக்கப்படும் பிரத்தியேக சிகிச்சை முறைகள் குறித்தும், இருதய நோய் வராமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் உலக இருதய தினத்தை (செப்டம்பர் 29) முன்னிட்டு “தி கோவை மெயில்” வாயிலாக இருதய மருத்துவக் குழுவினர் பகிர்ந்து கொண்டதன் தொகுப்பு:

 

இணைய சக்தியோடு இருதயம் காப்போம்!

டாக்டர். ஜே.எஸ். புவனேஸ்வரன், இயக்குனர், பி.எஸ்.ஜி. சிறப்பு மருத்துவமனை

நவீன டிஜிட்டல் வழிகள் மூலம் இருதய நலன் குறித்த விழிப்புணர்வு மற்றும் இருதய நோய் ஏற்படாமல் தவிர்க்கும் வழிமுறைகளை பெரும் திரளான மக்களுக்கு கிடைக்க வழிசெய்வதே இந்த வருட உலக இருதய தினத்தின் மையக்கருவாக உள்ளது.

இன்று பலருக்கு ஏற்படும் இருதய நோய்கள், அவரவர் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களின் பின்விளைவாக உள்ளது. இதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை பழக்கத்தோடு ஆரோக்கியமான உணவுகளை உண்ணவேண்டும், மது, புகையிலை ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்ற தெளிவை நீங்கள் அடைந்துவிட்டாலே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகளை உங்களால் குறைக்கமுடியும்.

ஆனால் இது உங்களுக்கு தெரிவதோடு மட்டும் நின்றுவிடாமல், நம் சமுதாயத்தின் அங்கமான அனைவருக்கும் இணைய சக்தியின் உதவியோடு அதை பகிரச் செய்யவேண்டும். நான் இதை இந்த உலக இருதய தினத்தை முன்னிட்டு நிச்சயம் செய்வேன், நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

வாழ்வியல் மாற்றம் இருதய நோயை போக்கும்!

டாக்டர் ராஜேந்திரன், தலைமை மருத்துவர், இருதயவியல் துறை

இந்தியாவில் உள்ள மக்கள் இருதய நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதோடு நம் மக்களுக்கு சர்க்கரை நோயும் அதிகரித்துள்ளது. இதை இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டுமெனில் நாம் பின்பற்றி வரக்கூடிய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதய பாதிப்பினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கீலீஷீறீமீ திஷீஷீபீ றிறீணீஸீt ஙிணீsமீபீ ஞிவீமீt என்று சொல்லக் கூடிய முற்றிலும் அசைவ உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தவிர்க்கப்பட்டு ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த உணவுப் பழக்கங்களில் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தாலே இதய பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்ட பின் சிலர் நடந்து செல்வதற்கு கூட தயங்குவார்கள். அந்த அச்சம் தேவையற்றது. இவர்களுக்கான பிரத்தியேக பயிற்சி வழங்கும் நோக்கத்தில், பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து சென்றவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் கார்டியாக் ரிஹாபிலிடேசன் மையம் மூலம் அவர்களுக்கு தேவையான உடற்பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். மேலும் பிற மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை எடுத்தவர்களும் இந்த மையத்தில் பதிவு செய்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் உலக இருதய தினத்தை முன்னிட்டு இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் துல்லியமான நவீன கருவிகளைக் கொண்டு Heart Health Package பரிசோதனை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

 

அலட்சியம் தவிர்ப்போம்!

டாக்டர் தமிழ் அரசு, இருதய நோய் வல்லுநர்

ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்பட்டு வரும் உலக இருதய தினம் மக்களிடம் இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அதில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற நோக்கத்துடனும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றம் நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. நோய் வருவதற்கு முன்பாகவே அதற்கு அடிப்படையாக உள்ள உடற்பருமன், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

நடுத்தர வயதுடையோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் அதனால் இருதய பாதிப்பும் ஏற்படுவதை தவிர்க்க சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது மிக முக்கியம். இவ்வாறு செய்வதின் மூலமே பிற நோய்களில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

ஒருவருக்கு ஏற்கனேவே இருதய பாதிப்பு வந்து விட்டால், மீண்டும் அந்த பாதிப்பு அல்லது அதை விட தீவிரமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். மேலும் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால், மற்றவர்களுக்கும் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது இன்றியமையாதது, அத்துடன் அவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இருதய நோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் உடற்பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை ஏற்படாமலும், ஏற்பட்டாலும் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இருதய பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும்.

இருதய நோய் உள்ளவர்கள் இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்ற காரணத்தினால் தாங்கள் எடுத்துவரும் மாத்திரைகளைத் தவிர்த்து விடுவார்கள். அப்படி செய்வது மேலும் பாதிப்பை அதிகரித்து விடும். டிஜிட்டல் முறையில் கூட நாம் அதற்கான மருத்துவ ஆலோசனைகளை இப்பொழுது பெற முடியும். நமக்குத் தெரிந்த தகவல்களை கொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. இதைப் பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அலட்சியப் போக்கை தவிர்ப்போம்.

 

வால்வு மாற்றுக்கு பின்பும் இயல்பு வாழ்க்கையே!

டாக்டர் ராமசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவர், இருதயவியல் துறை

இருதய வால்வுகளை பாதிக்கக்கூடிய நோய்களை மூன்று வகையாக பிரிக்கலாம். பிறவியிலேயே வால்வு கோளாறு, சிலருக்கு ரூமாட்டிக் காய்ச்சலின் மூலம் ஏற்படும் நோய்த் தொற்றின் விளைவாக உண்டாகும் அழற்சியினால் இதய வால்வு பாதிக்கப்படலாம், முதுமை அடையும் போது வால்வுகளில் படியும் கால்சியத் தால் பழுதடையலாம்.

ஒருமுறை ரூமாட்டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மேற்கொண்டு இதன் மூலம் இருதய வால்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி 21 நாட்களுக்கு ஒருமுறை Benzathine penicillin என்ற ஊசியை செலுத்திக்கொள்வதின் மூலம் வால்வு பாதிப்படையாமல் தடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக, வால்வு பாதிக்கப் பட்டாலும் அறுவை சிகிச்சை இல்லாமல் Balloon Valvàlopla என்ற சிகிச்சை முறை மூலமாக வால்வு துவாரத்தைப் பெரிதாக்கலாம்.

மேலும், அறுவை சிகிச்சை மூலம் செய்யக்கூடிய வால்வு மாற்று முறையில் உலோகம் மற்றும் தசையினால் செய்யப்பட்ட வால்வு என இரண்டு வகைகள் உள்ளன. தசை வால்வு இளம்பெண்களுக்கும், முதியவர்களுக்கும் பொருத்தப்படுகிறது.

உலோக வால்வுகளில் சில வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சில வால்வுகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவ்வால்வுகள் இதயத்தில் 20 அல்லது 25 ஆண்டுகள் வரை உழைக்கும் தன்மை கொண்டது. மேலும், தசை வால்வு 15 அல்லது 20 ஆண்டுகள் வரை உழைக்கும் தன்மை உடையது.

உலோக வால்வு வைத்தவர்களுக்கு அந்த வால்வு சரியாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அசிட்ரோம் என்ற மாத்திரை வழங்கப்படும். மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது அதன் வீரியம் எந்தளவிற்கு செயல்பட்டு வருகிறது என்பதை அறிய 3 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் மூன்று மாதம் கழித்து இயல்பாக செய்யும் வேலைகளை தொடரலாம்.

 

வரும் முன் காப்போம்!

டாக்டர் பிரேம் கிருஷ்ணா ஆனந்தன், உதவிப் பேராசிரியர் மற்றும் இருதய நோய் வல்லுநர்

இருதயவியல் துறைகளில் ஒன்றான இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முந்தைய கால கட்டங்களில் இருதய அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே குணப்படுத்தக்கூடிய சில நோய்கள் இருந்தன. ஆனால் இப்போது இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி மூலமாக தொடையில் அல்லது கையில் ஒரு துளை ஏற்படுத்தி இருதயத்தில் பாதிக்கப்பட்டுள்ள வால்வுகளை Trans Valve Aortic Implantation சிகிச்சை மூலம் மாற்றி அமைக்க முடியும். மயக்க மருந்து செலுத்தாமல் நோயாளியின் சுய நினைவிலேயே இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

மருத்துவத் துறையில் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால் இருதய பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு திறந்த அறுவை சிகிச்சையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைமை மாறிவிட்டது. பைபாஸ் சிகிச்சை மட்டுமே செய்து சரி செய்யக்கூடிய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை அட்வான்ஸ் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை முறையினால் சரி செய்யலாம்.

வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் உடற்பரிசோதனை போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம். மேலும், இருதய நோய் இருப்பதை நாம் பரிசோதனையின் மூலமாக கண்டறிந்து விட்டால் அதற்காக அச்சப்பட தேவையில்லை, தற்போது இருக்கக்கூடிய நவீன சிகிச்சை முறையின் மூலமாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

 

குழந்தைகளின் இருதய சிகிச்சையை தாமதிக்காதீர்கள்!

டாக்டர் வினோத் துரைசாமி, குழந்தைகள் இருதய நல மருத்துவர்

பிறந்த குழந்தைகளில் சில குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடு பிரச்சினையோடு பிறக்கிறார்கள். அப்படி ஏற்படும் பாதிப்புகளில் தீவிர பாதிப்பும் உள்ளது, லேசான பாதிப்பும் உள்ளது.

குழந்தையின் இதய வால்வு பிரச்சினை என்பது இதயத்தின் ரத்தக்குழாய் வால்வுகளில் அடைப்பை உண்டாக்கும் நிலை அல்லது சுருக்கம் உண்டாகும் நிலை. ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் பலூன் திறப்பு சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். அறுவை சிகிச்சை செய்யாமல் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதய பாதிப்புடன் பிறந்த குழந்தைக்கு இது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.

பிறவி இதய குறைபாட்டில் மற்றொறு வகை குழந்தையின் இதயத்தில் துவாரங்கள் இருப்பது. இதயத்தின் வலது இடது பகுதிகளாக பிரிக்கும் தசை சுவரில் உண்டாகும் சிறு துவாரமானது குழந்தை பிறக்கும் முன்பே ஏற்பட்டு விடுகிறது. இதை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். பிறந்த குழந்தைகளுக்கு இருதயத்தில் ஏற்படும் துவாரங்களுக்கு திறந்த அறுவை சிகிச்சை செய்யாமல் பிற சிகிச்சைகள் அளித்து சரிசெய்ய முடியும். சில குழந்தைகளுக்கு அதன் அளவைப் பொறுத்து துளைத்திறவு கோல் சிகிச்சை செய்யப்படுகிறது.

சில குழந்தைகளுக்கு இருதய வால்வு அடைப்பு, இருதய துவாரம் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் திறந்த அறுவை சிகிச்சை தான் செய்ய முடியும். அதிலும் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் ஆரம்பத்தில் பலூன் திறப்பு சிகிச்சை அளித்து, பின் குழந்தையின் எடை கூடிய பின் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும்.

இருதயத்தில் இருக்க கூடிய தசைகள் பலவீனமடைந்து இருதய துடிப்பு குறைந்து விடும். அதனால் உடலில் சில உறுப்புகளுக்கு சரியாக ரத்தம் செல்லாத நிலை ஏற்படும். இந்த மாதிரி நோயாளிகளுக்கு மூச்சு வாங்குதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் இதுபோன்ற அறிகுறிகள் வரலாம். நோயைக் கண்டறிந்த பின் மருந்துகள் அளிப்பதன் மூலம் சில முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. இதுபோன்ற நோயாளிகளுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தாமதிப்படுத்தினால் சிகிச்சைகள் மேற்கொள்வதில் சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், இருதய பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த குழந்தைகளால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். குழந்தைகளுக்கு இருதய சிகிச்சை அளிக்க கூடிய அனைத்து வசதிகளும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ளன.