கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் ஒவ்வொரு துடிப்பிலும் விழிப்புணர்வு சேரட்டும்…!

நமது இருதயம் 24 மணி நேரத்தில் குறைந்தது ஒரு லட்சம் முறை துடிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் கண் அசைந்தாலும், துளிகூட தளராமல் 365 நாட்களும் துடித்துக்கொண்டு நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ளும இருதயம், இறைவன் படைப்பில் ஒரு அதிசயமே.

ஆனால் இதற்கு ஏற்றவை எவை, கேடு விளைவிப்பவை எவை? இதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னசெய்யவேண்டும்? இதுபோல் நாம் எண்ணியிருப்போமா என்றால், அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் கணக்கில் உயிர்கள் இருதய நோயால் பறிபோகிறது என்பது பலராலும் உணரப்படாத ஒன்றாகவே உள்ளது. உலக மக்கள் அனைவரும் வருடத்தில் ஒரு நாளாவது இதயத்தைப் பற்றி சிந்திக்க, இருதய நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள, இருதய நலன் பற்றி பிறருக்கு பகிர வேண்டும் என்ற நோக்கில் செப்டம்பர் 29 உலக இருதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில், தமிழகத்தின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டலின் இருதயவியல் துறை வல்லுநர்கள் இருதயம் மற்றும் இருதய நோய்கள் பற்றி பல அரிய தகவல்களை பொதுமக்கள் நலன் கருதி நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கூறும் தகவல்கள் பின் வருமாறு:

 

இருதய நோயின் தாக்கத்தை தடுக்க ஒன்றிணைவோம்!

டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர், தலைவர், இருதயவியல் துறை

இந்த உலக இருதய நாளில் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தும் இருதய நோய்கள் மீது நம் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக நான் பார்க்கிறேன்.

கிட்டத்தட்ட 60 – 65 மில்லியன் இந்தியர்களுக்கு இருதய நோய் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 7% கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கும், 12% நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கும் இருதய நோய்கள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுப்பதோடு, இவை இளம் வயதினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு இருக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் இப்போது உள்ளது.

இந்தியாவில் கணிசமாக 45 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு இருதய நோய் ஏற்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் வருந்தக்கூடிய செய்தி. இருதய நோய் ஏற்படக் காரணமாய் அமையும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகமான உடற் கொழுப்பு ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்யவேண்டும். அதைப் போலவே நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள உணவுப் பழக்கமுறை மாற்றம், உடல் உழைப்பின்மை, அதிகரித்து வரும் புகை பழக்கம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை தவிர்க்க வேண்டும்.

இவற்றை மனதில் கொண்டு நாம் அனைவரும் ஒரு சமுதாயமாக ஒன்றிணைந்து, இதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து, அதை தடுக்க முயல்வோம்.

 

மன மாற்றமும் வேண்டும்!

டாக்டர் சுரேஷ் குமார், குறுக்கீட்டு இருதய நோய் மருத்துவர்

மாரடைப்பு வருவதற்கான தவிர்க்க முடியாத காரணங்களாக ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருப்பது, பரம்பரையாக இருக்கக்கூடிய வியாதிகளின் தன்மையினாலும் மாரடைப்பு வரலாம். இப்படி பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இருதய நோய் வருவதை தவிர்க்க கூடிய வகையில் சில மாற்றங்களையும் நம்மால் செய்ய முடியும். அதில் புகைபிடித்தலை விடுவது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, ஒரே இடத்திலேயே அமர்ந்து இருக்காமல் சுறுசுறுப்பாக வேலை செய்தல் போன்றவற்றை செய்வதன் வழியாகவும் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

டென்ஷனாக இருப்பதால் தான் புகை பிடிக்கிறேன், ஆல்கஹால் அருந்துகிறேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் நோய் பாதிப்பு உண்டாக்கும் இப்பழக்கத்தை நம்மால் தவிர்க்க முடியும். இவற்றில் இருந்து விடுபட உதவும் வகையில் யோகா, இசை, நகைசுவை காட்சிகளை பார்த்தல் என மனதை வேறு திசைக்கு திருப்புங்கள்.

 

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்!

டாக்டர் சரவணன், இருதய நோய் நிபுணர்

மாரடைப்பு ஏற்பட்டால்    நெஞ்சுப்பகுதியில் மட்டும்தான் வலி இருக்கும் என கூறுவார்கள். ஆனால் தொண்டை, கைகள், மேல்வயிறு போன்ற இடங்களிலும் வலி ஏற்படலாம். சிலருக்கு வலி இல்லாமல் எரிச்சல் ஏற்படுவது போன்ற உணர்வு, இறுக்கம், நெஞ்சுப் பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வும் ஏற்படும். இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றினால் சுதாரித்துக் கொள்ளவேண்டும்.

மேலும் வியர்வை, வாந்தி, படபடப்பு, மயக்கம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்ற வித்தியாசங்கள் உடலில் காணப்பட்டால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அறிகுறிகள் சில நிமிடங்களும் இருக்கலாம் அல்லது அதிகரித்து கொண்டும் போகலாம். அதனால் இந்த உணர்வு தோன்றும் போதே காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்று விடவேண்டும்.

சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் எதுவும் ஏற்படாமல் கூட இருக்கும். நடக்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போன்ற உணர்வு சிலருக்கு ஏற்படும். ஆனால் பாதிக்கும் மேலானவர்களுக்கு மாரடைப்பு திடிரெனவே தோன்றுகின்றது.

 

தீர்வளிப்பது இணையம் அல்ல, நிபுணர்களே!

டாக்டர் மோகன், இருதயவியல் துறை நிபுணர்

இருதய நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் காலத்தை வீணடிக்காமல் அருகில் உள்ள உயர்தர மருத்துவமனைக்கு செல்வது மிக அவசியம்.

அங்கு தான் இது என்ன மாதிரியான இருதய நோய் என்பதை துல்லியமாக ஆராய உதவும் மருத்துவத் தொழில் நுட்பமும், மிக சவாலான இருதயம் தொடர்பான உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வு தரக்கூடிய அனுபவம் கொண்ட நிபுணர்களும் இருப்பார்கள்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், அதிநவீன ஆஞ்சியோகிராம், உயர்தர ஆஞ்சியோபிளாஸ்டி செய்யக்கூடிய கட்டமைப்பு, ரத்த குழாய்களில் ஏற்படும் கடினமான கால்சியத்தை உடைக்கக்கூடிய ’ரொடேப்ளாட்டோர்’ கருவிகள் மற்றும் தீவிர இதய சிகிச்சையில் உதவக்கூடிய நவீன எக்மோ கருவிகள் போன்ற அனைத்தும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை தங்குதடையின்றி வழங்க என்றும் உள்ளது.

 

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்

டாக்டர் மினோடி சுபாஷ், குழந்தைகள் இருதய நல மருத்துவர்

குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பாதிப்பிற்க்கான அறிகுறிகளை மூன்றாக பிரிக்கலாம். ஒரு வயதுக்கும் குறைவான கைக் குழந்தைகளுக்கான அறிகுறியாக மூச்சு வாங்குதல், பால் குடிப்பதில் சிரமம், அதிகமான வியர்வை, எடை அதிகரிப்பின்மை போன்றவை குழந்தையின் இருதயத்தில் ஏதேனும் தொந்தரவு இருப்பதை உணர்த்துகிறது.

அடுத்தபடியாக எழுந்து நடக்கக் கூடிய மற்றும் பேச ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் ஏதேனும் விளையாடும்போது அதிகம் மூச்சு வாங்கும், விரைவில் சோர்வு ஏற்படும், எடை மற்றும் உயரம் என வளர்ச்சியில் சிறிது தாமதம் மற்றும் தோல், நகம், நாக்கு, உதடு போன்ற இடங்களில் நீல நிறமாக தோன்றும்.

சில சமயங்களில் குழந்தைகளுக்கு அறிகுறிகள் எதுவும் இருக்காது அல்லது லேசான அறிகுறிகளே இருக்கும். மருத்துவப் பரிசோதனையில் அதிக இதய துடிப்பு, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு போன்றவற்றை அறியும்போது இருதயத்தில் பாதிப்பு உள்ளதை கண்டறிய முடியும்

எல்லா இருதய நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் நோய் கண்டறியப்பட்ட உடன் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளில் அனைவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படாது. நோயின் தன்மையைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவைப்படும். மேலும் இருதய சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். இது போன்ற இருதய சிகிச்சைகள் சாத்தியப்பட மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களே காரணம்.

 

ஓய்வின்றித் துடிக்கும் இருதயத்தைப் பாதுகாப்போம்!

டாக்டர் லாரன்ஸ் யேசுராஜ், இருதய துடிப்பு மற்றும் இருதய பலவீனம் சிறப்பு மருத்துவர்

நம் அனைவருக்கும் இருதயம் தொடர்புடைய நோய் என்றாலே மாரடைப்பு தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத் தாண்டி இருதயத்தில் வேறு விதமான நோய்களும் இருக்கின்றன. மேலும் இருதயத் துடிப்புகளில் இருந்தும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இருதயத்தின் துடிப்பு குறைவாக இருக்கும் சிலருக்கு மாத்திரைகள் மூலமாக அதை சரிசெய்து விடலாம். மேலும் இருதயத் துடிப்பு உருவாகும் இடங்களில் வரக்கூடிய பிரச்சினைகளால் நிரந்தரமாக இருதயத் துடிப்பு பாதிக்கப்படலாம். அந்த சமயங்களில் இருதயத் துடிப்பை சரி செய்வதற்கு பேஸ் மேக்கர் என்ற கருவியை இருதயத்திற்குள் பொருத்தி துடிப்பை மீண்டும் ஏற்படுத்த முடியும்.

சிலருக்கு இருதயத் துடிப்பு அதிகமாக ஏற்படும் சமயத்தில் துடிப்பு வேகமாக எங்கு உருவாகிறதோ அதைக் கண்டுபிடித்து அந்த இடத்தில் ரேடியோ ஃப்ரீக்வேன்சி அப்ளேசன் (Radiofreqàency abla) என்ற சிகிச்சையின் மூலமாக இருதயத்தில் தவறான வழியில் வரக்கூடிய கரண்டை இந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.

இருதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை துடிக்கும். அத்துடன் இருதயத்திற்குள் 100 மி.லி ரத்தம் உள்ளே வந்தால் அதில் 60 முதல் 80 மி.லி ரத்தத்தை இருதயத்தினால் வெளியேற்ற முடியும். இந்த செயல்பாட்டை இயங்கும் திறன் என்கிறோம்.

சிலருக்கு இருதயத்தில் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு, இருதயத்தில் வரக்கூடிய பிற வியாதிகளினால் இருதயத்தின் இயங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இதை இருதய பலவீனம் நோய் எனக் கூறுகிறோம். சிகிச்சையின் மூலம் இந்நோயை குணப்படுத்தலாம். ஆனால் சிலருக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகலாம். அந்த சமயத்தில் சி.ஆர்.டி என்ற கருவியை இருதயத்தில் பொருத்தி துடிக்கும் திறனை மேம்படுத்த முடியும்

 

இருதயங்கள் பலப்பட இதை செய்யுங்கள்!

டாக்டர் லிஜோ வர்கீஸ் இருதயவியல் நிபுணர்

இன்று இளைஞர்கள் பலருக்கும் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. இந்த நோய்களிலிருந்து நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள நாம் சிலவற்றைச் செய்ய வேண்டும்.

ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் உழைப்பில்லாத வாழ்க்கைப் பழக்கங்களைத் தவிர்த்து துடிப்புடன் இயங்க வேண்டும். நீங்கள் ஒரு இடத்தில் 1 மணிநேரம் அமர்ந்திருந்தால் குறைந்தது 5 நிமிடங்களாவது நடந்து உங்கள் கால்களுக்கும், தசைகளுக்கும் வேலை தரவேண்டும்.

உணவுகளை உண்ணும்போது ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மறக்கக்கூடாது. எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை முடிந்தவரை தவிருங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவுகளை (காய்கறிகள் மற்றும் மீன்கள்) ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் உடல் உயரத்திற்கேற்ற உடல் எடையை கொண்டவராக இருக்கத் தவறாதீர்கள். உங்கள் உயரத்திற்கேற்ற எடையைவிட கூடுதலாக இருப்பது உங்களுக்கு இருதய நோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

புகைப்பழக்கம் உடையவராக இருந்தால் முதலில் அதை அறவே நிறுத்துங்கள். குறிப்பாக, ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவராக இருந்தால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் பக்கமே செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. எந்த காரணத்தால் மன அழுத்தம் நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ள யோகா, இசை, தியானம் போன்ற ஆக்கபூர்வமான அனைத்து முறைகளையும் கடைபிடியுங்கள்.

 

ஆரோக்கிய உணவும், உடற்பயிற்சியும் அவசியம்!

டாக்டர் பாலகுமரன், இருதய நல மருத்துவர்

உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக இருதயம் உள்ளது. உடலில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய உறுப்பு இருதயம் மட்டுமே. இருதய நோய் வந்த பின்பு அதை சரி செய்ய பல சிகிக்சை முறைகள் இருந்தாலும், நோய் வராமல் இருக்க சில வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். அதில் முக்கியமானது நாம் உண்ணும் முறை. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்வதோடு ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

இருதய பாதிப்பு என்று வரும்போது எந்த சமையல் எண்ணெய் பயன்படுத்தலாம் என்ற குழப்பம் மக்களிடையே அதிகம் ஏற்படும். ஆனால் இவ்வாறான குழப்பம் தேவையற்றது. அதிகளவில் சமையல் எண்ணெய் உபயோகிக்காமல் தேவையான அளவு பயன்படுத்தினாலே போதுமானது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த தினை, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் உடலிற்கு நன்மை உண்டாவதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இருதய நோய்கள் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இருதய ஆரோக்கியத்திற்கும், நோய் ஏற்படாமல் இருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமானது. காலை அல்லது மாலை வேளைகளில் 40 அல்லது 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். பல ஆய்வு முடிகளும் உடற்பயிற்சி செய்வது உடல்நலனுக்கு நல்லதே எனத் தெரிவிக்கின்றன.