ஆக்ரா என்று சொன்னால் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது தாஜ்மஹால் மட்டுமே. ஆனால், தாஜ்மஹாலுக்கு சமமான போற்றுதலுக்கு தகுதியான ஒரு வரலாற்று ரத்தினமாக ஆக்ரா கோட்டை நிற்கிறது.
ஆக்ரா கோட்டை அம்சங்கள்
ஆக்ரா கோட்டையானது ஆரம்பத்தில் முகலாயப் பேரரசர் அக்பரால் ஒரு இராணுவக் கோட்டையாக வடிவமைக்கப்பட்டது. இது அடுத்தடுத்த மாற்றங்களுக்கு உட்பட்டு, இறுதியில் அவரது மகன் ஷாஜஹானால் அரண்மனையாக மாற்றப்பட்டது.
அக்பருக்கு சிவப்பு மணற்கல்லின் மீதான ஈர்பின் காரணமாக கோட்டையின் பெரும்பகுதியின் கட்டுமானத்திற்கு சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கட்டுமான பணியில் வட இந்தியா முழுவதும் உள்ள குவாரிகளில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட பிரீமியம் மணற்கற்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
கோட்டையின் தெற்கு நுழைவாயிலில் 60 டிகிரி சாய்வான நடைபாதை உள்ளது. இது எதிரி நாட்டினர் போர் தொடுக்கும் போது அவர்களது யானைப் படை மற்றும் குதிரை படையை முற்றுகையிட்டு, அவர்களின் செயல்திறனைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நாட்டினர் நுழைவு வாயில் வழியே நுழைவதை தடுக்க (சூப்பர் ஹீட்)எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது. இந்த செயல் அந்தக் காலத்தின் அறிவியல் மற்றும் கட்டிடக்கலையின் அற்புதமான கலவையை எடுத்துக்காட்டுகிறது.
முகலாயப் பேரரசின் அடையாளம்
கோட்டையில், யமுனை நதிக்கு இணையாக ஒரு அகழி உள்ளது. நான்கு திசைகளிலும் உள்ள வலிமையான வாயில்கள் அதை மிகவும் அசைக்க முடியாததாக கம்பீர தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. ஆக்ரா கோட்டையானது முகலாயப் பேரரசின் திறன்களின் அடையாளமாக திகழ்கிறது.
ஔரங்கசீப் தனது தந்தையான ஷாஜகானை ஆக்ரா கோட்டையில் உள்ள எண்கோண கோபுரத்தில் (முஸ்ஸாமான் புர்ஜ் என்றும் குறிப்பிடப்படுகிறது) எட்டு வருட காலத்திற்கு அடைத்து வைத்தார். நீங்கள் இப்போதும் முஸ்ஸாமான் புர்ஜுக்குச் செல்லலாம், அங்கு இருந்து தாஜ்மஹாலைக் காணலாம்.., பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் செய்தது போலவே…,
மேலும், ஆக்ரா கோட்டையில் இருக்கும் ஜோதா பாயின் அரண்மனை சுவர்களில் உள்ள திறப்புகள் வழியாகவும் தாஜ்மஹாலை காண முடியும். ஆக்ரா கோட்டையில் உள்ள காஸ் மஹால் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் திவான்-இ-காஸின் முன்மாதிரியானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ஆக்ரா கோட்டையின் திவான்-இ-காஸில் ஷாஜகானின் புகழ்பெற்ற மயில் சிம்மாசனம், கோஹினூர் வைரம் உட்பட விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், தற்போது ஆக்ரா கோட்டையானது 80 சதவீதம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களை தவிர்த்து பொதுமக்களால் பல பகுதிகளை அணுக இயலாது. இந்தியாவில், முகலாய கோட்டைகளில் ஒன்றாக திகழும் ஆக்ரா கோட்டை உங்கள் பயண விருப்பப்பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.