பி.எஸ்.ஜி கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு 

சமீபகாலமாக ஜாதி ரீதியான பாகுபாட்டைப் பள்ளி, கல்லூரிகளில் புகுத்தும் முயற்சி நடக்கிறது என்றும் இத்தகைய முயற்சிகளுக்கு மாணவர்கள் இடம் தராமல் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி பேசினார்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார், காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர்கள் ராதா, ஜெயபிரகாஷ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி கலந்துகொண்டு, பேசுகையில் வாழ்நாளில் அனைவருக்கும் சிறந்த காலமாக இருப்பது கல்லூரி காலம் தான். அந்த காலகட்டத்தில் ராகிங் மாதிரியான சட்ட விரோத நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.  தன்னம்பிக்கை இல்லாத மாணவர்கள் தான், ராகிங் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ராகிங் போன்ற செயல்களுக்கு எதிராக மாணவர்கள் தைரியமாகக் காவலர்களை அணுகி, புகார் அளிக்கலாம். இத்தகைய புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கோவை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபகாலமாக, ஜாதி ரீதியான பாகுபாட்டைப் பள்ளி, கல்லூரிகளில் புகுத்தும் முயற்சி நடக்கிறது. இத்தகைய முயற்சிகளுக்கு மாணவர்கள் இடம்தராமல், மாணவர்கள் தங்களின் இலக்கு நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்., என்றார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் பிருந்தா பேசுகையில் “கல்வி நிலையம் என்பது கோயில் போன்றது. அங்கு எப்போதும் அமைதியான சூழல்தான் நிலவ வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ராகிங் இல்லாத கல்லூரியாக பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி திகழ்கிறது.”என்றார்.