கோவையில் எய்ம்ஸ் மேலாண்மை கல்வி மாநாடு துவக்கம்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சங்கம் (எய்ம்ஸ்), கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி.,ஐ டெக் கருத்தரங்கு மையத்தில் ஆகஸ்ட் 24 முதல் 26 வரை 34வது மேலாண்மை கல்வி கருத்தரங்கு நடைபெறவுள்ளது .
இப்பதிப்பானது “புதிய மாற்றத்துக்கான மேலாண்மை கல்வியின் பயன்பாடு” என்ற தலைப்பில் நடக்கிறது.

பொள்ளாச்சி, ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் இயக்குநரும், எய்ம்ஸ் தலைவருமான நந்தகோபால் துவக்க விழாவில் அனைவரையும் வரவேற்று, முதல்முறையாக கோவையில் இம்மாநாடு நடக்கிறது என தெரிவித்தார்.

இந்த ஆண்டு மாநாடு, வணிக கல்வி நிறுவனங்களின் டீன்கள், இயக்குநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறையில் முன்னணி தலைவர்களுக்கு ஒரு தளமாக இருக்கும். கற்பித்தல், கற்போர், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோருக்கு மேலாண்மை குறித்த உள்ளார்ந்த பார்வையை ஒரே கூரையின் கீழ் வழங்குவதாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் பெங்களூரூ இந்திய மேலாண்மை சங்கத்தின் முன்னாள் இயக்குநர் பிலிப், துவக்க உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் சீதாராம் மாற்றும் பிஸினஸ் ஸ்டேண்டார்டு இதழின் ஆசிரியர் குழு இயக்குநர் பட்டார்ச்சார்யா ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டின் இயக்குநர் ஸ்ரீவித்யா பேசுகையில், ” பி.எஸ்.ஜி.,மேலாண்மை கல்வி நிறுவனம், தென்னிந்திய அளவில் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்துவதில் பெருமையடைகிறது,” என்றார்.

மாநாட்டின் முன்னோட்டமாக இரண்டு கருத்தரங்குகள் நடந்தன.முதலாவது,சர்வதேச அங்கீகாரம் குறித்த ஒரு பார்வை என்ற தலைப்பில், சீ.இ.ஏ.ஏ அறக்கட்டளை தலைவர் தோத்தரி ராமன், ஆசிய இஎப்எம்டி குளோபல் நெட்வொர்க் சிறப்பு ஆலோசகர் நிஷித் ஜெயின், வால்டன் பல்கலைக் கழக கல்லுாரியின் டாக்டர் டக்ளஸ் கில்பர்ட், பவன்ஸ் கம்யுனிகேஷன் அன்ட் மேனேஜ்மென்ட் மையத்தின் கல்வி வளர்ச்சி மேம்பாட்டு இயக்குநரும், முன்னாள் தலைவருமான சுஜாதா மங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டாவது கருத்தரங்கில், எய்ம்ஸ் முன்னாள் தலைவரும், எமிரட்டஸ் ஐ.எஸ்.பி முன்னாள் டீன் எம்.ஆர்.ராவ், மனிதவள மேம்பாடு மற்றும் மேலாண்மை முதுநிலை பேராசிரியர் சவ்ரவ் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், வரும் 26-ம் தேதி நடைபெறும் விழாவில் எல்.ஜி எக்யுப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜுக்கு , மேலாண்மைக் கல்வி மற்றும் கம்பெனி நிர்வாகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க தேசிய விருதான ரவி ஜெ மத்தாய் விருது வழங்கப்படவுள்ளது.

இதில் தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.