கோவையில் ரிசார்ட் வடிவிலான சிகிச்சை மையம் திறப்பு

ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் மற்றும் ஆங்கில மருத்துவம் என்ற மூன்று மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ரிசார்ட் அமைப்பிலான சிகிச்சை மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை என்றாலே கட்டுப்பாடுகள், பயம், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அம்சங்களை நம்மை தொற்றிக் கொள்ளும். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் “வர மாட்டேன்” என்று சிறுவயதில் நாம் அடம்பிடித்திருப்பதும் உண்டு. இதில் சிலர் ஆயுர்வேத மருத்துவம் சிறந்தது என்று ஆயுர்வேத சிகிச்சை மையங்களுக்கும், சிலர் இயற்கை வைத்திய முறைகளையும் தேர்வு செய்கின்றனர்.

இதனிடையே ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை வைத்தியத்தை உள்ளடக்கிய சிகிச்சை மையத்தை கோவையைச் சேர்ந்த மருத்துவர் துவங்கியுள்ளார். மூன்று மருத்துவ முறைகளிலும் உள்ள சிறந்த வைத்தியங்களைக் கொண்டு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறந்த சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு பெண் கருவுற்றது முதல் பிள்ளைப்பேறு வரை அவருக்கு தேவையான தெரபி, சிகிச்சைகள், முதியவர்களுக்கான மருத்துவங்கள், போதை பழக்கத்தில் இருந்து மீட்கும் மருத்துவங்கள், சப்தங்களை கொண்டு சிகிச்சை, நீர் கொண்டு சிகிச்சை, மண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

வழக்கமான மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்கள் போல அல்லாமல், ‘வீக் எண்ட்’ ஒன்றில் ‘ரிசாட்டில்’ தங்கியிருப்பது போன்ற உணர்வை தருவதே இந்த சிகிச்சை மையத்தின் ஸ்பெஷாலிட்டி என்று கூறலாம்.

எந்த நிலையில் மக்கள் வந்தாலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மருத்துவம் கொடுக்கும் வகையில் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது “நிலை” என்ற இந்த சிகிச்சை மையம். இதுகுறித்து நிலை சிகிச்சை மையத்தின் நிறுவனரும் மருத்துவருமான தினேஷ் கூறியதாவது:

ஆயுர்வேதா, அலோபதி, நேட்சுரோபதி, அக்குபஞ்சர் ஆகிய பலவகை மருத்துவங்களையும் ஒரு சேர்த்து இந்த நிலை சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 15 மருத்துவர்கள், 15 தெரபிஸ்டுகள், செவிலியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 70 பேர் கொண்ட குழுவினரை கொண்டு நிலை சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பலவகை வாழ்க்கை முறை நோய்களுக்கு சிகிச்கை அளிக்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு உடல் பொழிவு பெறவும், கரு உண்டாவதற்கான மருத்துவமும், குழந்தை பேருக்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவத்திற்கான உடற்பயிற்சிகள், மூச்சு பயிற்சி ஆகியவை கற்றுத் தரப்படுவது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பிறகு பண்டைய கால வழிமுறைகளின் படி உடலை வலுப்படுத்துதல், பிறந்த குழந்தையை சரிவர பேணுவதற்கான வழிமுறைகளும் இங்கு கற்றுத்தரப்படுகிறது.

மேலும் நீர் சிகிச்சை, எதிர்ப்பு ஈர்ப்பு சிகிச்சை ஆகிய வலி நிவாரண சிகிச்சைகளும், மண் சிகிச்சை, நறுமண சிகிச்சை என மனதினையும், உடம்பினையும் ஒரு நிலை படுத்த கூடிய பல சிகிச்சை முறைகள் இங்கு கையாளப்படுகிறது. இதுதவிர, குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிகமாக சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருத்தல் ஆகிய பழக்கங்களில் இருந்து ஒருவர் மீள்வதற்கும் இந்த மையம் உதவுகிறது.

இதனை ஒரு ஆரோக்கிய ஓய்வு விடுதி என்று கூறலாம். இதில் 50 பேர் வரை தங்கி சிகிச்சை பெறலாம். ஒரு நாள் முதல் 21 நாள் வரை ஒருவர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் பல்வேறு சிகிச்சைகள் இந்த மையத்தில் உள்ளன.

பல்வேறு மருத்துவ முறைகளையும் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் இது போன்ற சிகிச்சை மையம் இந்தியாவிலேயே எங்கும் இல்லை. நாம் எந்த உயரத்திற்கு சென்றாலும், புதிய தொழில் நுட்பங்களை உபயோகித்தாலும் நமது அடித்தளம் என்பது முறையான மற்றும் சரியான மருத்துவம் தான். அதனை நிலை வழங்குகிறது என்றார்.