கோவையில் ரூ.37 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்!

கோவை மாநகராட்சி பகுதியில் 37 கோடி மதிப்பில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழுவின் பொது நிதி பணிகள் போன்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கட்கிழமை துவக்கி வைத்தார்.

அதன்படி கிழக்கு மண்டலத்தில் சிங்காநல்லூர் முத்தமிழ் நகர்,  வடக்கு மண்டலத்தில் காந்திவீதி, மத்திய மண்டலத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஆகியவற்றில் 5.26 கோடி மதிப்பில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகள், கவுண்டம்பாளையம் தொகுதியில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை சக்தி சாலையில் 19.34 கோடி மதிப்பில் மைய தடுப்பு தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள்,

எம்ஜிஆர் மார்க்கெட்டில் 3.07 கோடி மதிப்பில் கடைகள் கட்டுதல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகள்,  அண்ணா மார்க்கெட்டில் 3.86 கோடி மதிப்பில் கடைகள் கட்டுதல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகள், வார்டு எண் 87 மற்றும் 88 க்கு உட்பட்ட பகுதியில் 4.98 கோடி மதிப்பில் லட்சுமி நகர் முதல் சிறுவாணி டேங்க் வரை மழைநீர் வடிகால் கட்டும் பணிகள்,

மேலும், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 53 லட்சம் மதிப்பில் பெரியகுளம் திறந்த வெளி அரங்கில் மறுசுழற்சி செய்யப்பட்ட திடக்கழிவுகளைக் கொண்டு கலை கட்டமைப்புகள் ஆகியவை துவக்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.