என்.ஜி.பி. கல்லூரியில் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா

என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26 வது தமிழோசை இதழ் வெளியீட்டு விழா என்.ஜி.பி. கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த இதழில், மாணவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணரும் விதமாக ‌அவர்களின் படைப்புகள் முழுமையாக இடம்பெற்றிருந்தன. குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது.  கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் குப்புச்சாமி வரவேற்புரை வழங்கினார் மற்றும் கல்லூரியின் முதல்வர் சரவணன் தொடக்கவுரை வழங்கினார்.

கோவை மருத்துவமைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை உரையில் தமிழ்மொழியின் சிறப்பு குறித்து, தமிழின் தொன்மை குறித்து மிகத்திறம்பட எடுத்துரைத்தார். தமிழ்மொழி இனிமையானமொழி, அந்தமொழி செம்மையானது.அதன்வளம் சிதையாது இந்தத் தலைமுறையினர் பாதுகாத்திடல் வேண்டும் என்றார்.

மேலும் கல்லூரியின் இயக்குநர் முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழோசை இதழ் நூலை சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் வெளியிட்டார்

அந்த நூலை கோவை மருத்துவமைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முருகேசன் அவர்கள் எழுதிய ’சங்ககாலத்தமிழரின் சமூக வாழ்வும் கலைத்திறனும்’ என்ற நூலை வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுகவுரையை கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முருகேசன் வழங்கினார். எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் ‘வாசிப்பேவெல்லும்’ என்ற தலைப்பில் வழங்கிய சிறப்புரையில், தமிழ்மொழியின் தொன்மை குறித்து மிகநுட்பமாகக் கூறினார்.

தமிழ்மொழியில் இருக்கின்ற அரிய நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றின் மூல நூல்களைத் தேடித்தாம் சென்றவிதம், அந்த நூல்கள் தற்போது எந்த நூலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்துகூறினார். தமிழுக்குத் தொண்டாற்றியஉ.வே.சா, ஜி.யூ.போப், திருவள்ளுவர் குறித்துஆராய்ச்சி நோக்கில் மாணவர்களுக்கான உரை வழங்கினார்.

வேறுமொழிகளுக்கு இல்லாதசிறப்பு தமிழ்மொழிக்கு இருப்பதை ஆணித்தரமாக மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்தியம்பினார். தமிழோசை இதழ் பதிப்பாசிரியர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்  ரங்கநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.