கோவையில் அனைத்து மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு உறுதி – மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டமானது, சமூக
மக்களும், அனைத்து மாநிலங்களையும் சார்ந்த தொழிலாளர்களை கொண்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவரும் தொழில் சார்ந்த மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எவ்வித பகைமையுமின்றி அமைதியான முறையில் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் நன்மாவட்டமாகும். இங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான இருப்பிடவசதி, உணவு, ஊதியம் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி அனைத்தும் வேலையளிப்பவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சாதி மொழி மற்றும் இனப்பிரச்சனைகள் ஏதும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம் மற்றும் பொது அமைதியினை பராமரித்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதன் காரணமாக கோயம்புத்தூரிலிருந்து வெளியேறி வருவதாகவும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றது. அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும்.

பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்கள் தீர்ப்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட “புலம்பெயர் தொழிலாளர்கள் குறைகளைவு குழு” (Migrant Labour Committer) அமைக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் துறையின் மூலமும் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே பிறமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கி வரும் 1077 என்ற இலவச எண்ணை (Toll Free) தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் கோயம்புத்தூர் மாநகர காவல்.ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி கைப்பேசி எண் 0422-2300970, 9498181213, 8190000100 9443808277 மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண் 9498181212, 7708100100 ஆகியவற்றிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும். சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.