நா.கார்த்திக்., யிடம் நலம் விசாரித்த முதல்வர்: உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க அறிவுறுத்தல்

தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்., யிடம் தொலைபேசி மூலம் தொடர்ந்து 5 முறை நலம் விசாரித்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், உடலில் சிறிய மாற்றம் தெரிந்ததை அடுத்து கடந்த 30 ந்தேதி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைபடி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

நா.கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே, இதுகுறித்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நா.கார்த்திக்., யிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, உடல்நிலை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நா.கார்த்திக், மனைவி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்களிடமும் கேட்டறிந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்கு பின்பும் தொடர்ந்து 4 முறை தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு சென்னை திரும்பிய, தமிழக முதல்வர் காலை 7-50 மணிக்கு மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அப்போது எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தொடர்பாக கேட்டறிந்தவர், தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மேற்கொள்ளவும், உணவு முறைகள், அதன் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் அறிவுறுத்தினார்.