ஈரோடு இடைத்தேர்தல்: ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்துள்ளனர் – ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதி மீறல் என்பதை விட ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

நேரடியாக திமுகவினர் செய்யும் விதிமீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆளுங்கட்சியான திமுக, வாக்காளர்களை அழைத்து, அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு போடுவதாகவும், அங்கு நடைபெறும் குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சூழலில் பலமுறை இந்த விதிமுறைகள் குறித்து தான் பேசியும் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் ஆனால் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பிய அவர், ஊடகத்தினருக்கான நேர்மையும் தர்மமும் உள்ள சூழலில் அவர்கள் அதனை மீறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் முழுக்க முழுக்க விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
நாட்டின் முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, வாக்காளர்கள் தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என முடிவு செய்து வாக்களிப்பார்கள். ஸ்டாலின் ஓட்டு போட போவதில்லை என பதிலளித்தார்.

மேலும் மக்கள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியவரும். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு, ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாகவும் கடுமையாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ,அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுசெயலாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கூடி பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.