பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.7500 வரை இருக்கும் – வேளாண் பல்கலை கணிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பருத்திக்கான விலை முன்னறிவிப்பு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த பத்திரிகை செய்தியில் கூறியிருப்பது: பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக, இந்தியாவில் பருத்தி இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சவீதம் குறைவாகும். இந்தியாவில் பருத்தி ஏற்றுமதி 46 லட்சம் பொதிகளாகவும் மற்றும் இது கடந்த ஆண்டை விட 59 சதவீதம் குறைவாகும்.

வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இந்தியா பருத்தியை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020-21-ஆம் ஆண்டில் 352 லட்சம் பொதிகளிருந்து 2021-22 ஆம் ஆண்டு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. பஞ்சாலைகளின் குன்றிய தேவை காரணமாக, பருத்தியின் விலை சமீப காலமாக சற்று குறைந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில், பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப்பட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது. தற்போது, ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிபட்டம் விதைப்பு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராக திகழ்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட பரப்பளவில் 7.5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைகேற்ப குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் 2023 வரை குவிண்டாலுக்கு ரூ.7000 முதல் ரூ.7500 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.