ஜேஎன்யு பல்கலையில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாணவர்களை தாக்கியதோடு தந்தை பெரியார், காரல் மார்க்ஸ், போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் ஏபிவிபி அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து அமைப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏ.பி.வி.பி பயங்கரவாத அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பு சார்பில் கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் மாணவர் கழகத்தின் பொறுப்பாளர் கோகுல்நாத் தலைமையில், எஸ்.எப்.ஐ மாணவர் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.