பிப்.,26 இல் கோவையில் இசை விருந்தளிக்கும் ஜொனிதா காந்தி!

இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி என 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். யூடுபில் உள்ள இவரது கவர் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் விருப்பப்படுகிறது. மேலும், பீஸ்ட் திரைப்படத்தில் இவர் பாடிய அரபி குத்து பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக ஜொனிதா காந்தியின் நேரடி இசை கச்சேரி நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை அருண் ஈவென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இசைநிகழ்ச்சி குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி துவங்கும். இன்றைய தலைமுறை இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஜொனிதா காந்தி இடைவிடாமல் தொடர்ந்து இரண்டரை மணிநேரம் தனது இசை குழுவினர்களோடு பாட உள்ளார்.

இதில் 60 சதவீதம் தமிழ் பாடல்கள் பாடப்படும். மேலும் கோவையில் பல தரப்பட்ட மக்கள் உள்ளதால் பிற மொழி (தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம்) சார்ந்த பாடல்களும் கச்சேரியில் இடம்பெறும்.

25,000 முதல் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வை காண வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச அளவிலான இசை கச்சேரிக்கு இணையாக இருப்பதோடு, உலக தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் நிகழ்வில் பயன்படுத்தப்படுகிறது.

டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.500 தொடங்கி ரூ.5000 வரை உள்ளது. ஆறு வகையான விலையில் விற்பனை செய்ய்யப்படுகிறது. Bookmyshow, PayTm Insider, Sporfy ஆகிய தளங்களில் டிக்கெட் கிடைக்கும். விரைவில் ஹோட்டல்கள் மற்றும் மால்களில் கிடைக்கும். தற்போது 60 % டிக்கெட்கள் விற்பனையாகி விட்டன. இசை நிகழ்வை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் நிகழ்வில் பாதுகாப்பு தொடர்பான எந்த பிரச்சினையும் இருக்காது. களத்தில் ரசிகர்களுக்கு டிக்கெட் தொடர்பான பிரச்சனை எதுவும் இருந்தால் அதற்கென தனியாக அமைத்திருக்கும் கவுண்டர் மூலம் அவை சரி செய்யப்படும் என கூறினர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாடகி ஜொனிதா காந்தி நேரடியாக ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த காணொலி திரையிடப்பட்டது.