தூதரகம் பரிந்துரையின் பேரில் அதிமுகவைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி அமெரிக்கா பயணம்

அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் கோவை மண்டல செயலாளராக பணியாற்றி வரும் சிங்கை ஜி.ராமச்சந்திரன், அமெரிக்கா தூதரக அழைப்பின் பேரில் 3 வார பயிற்சி பெற நாளை அமெரிக்கா செல்கிறார்.

இவருக்கு அமெரிக்க அரசாங்கம் 82 வருட பழமையான இன்டர்நேஷனல் விசிடர் லீடர்ஷிப் ப்ரோக்ராம் ஆன் யங் பொலிட்டீசியன்ஸ் (International Visitor Leadership Program on Young Politicians: The Future of Indian Democracy (IVLP)) எனப்படும் மூன்று வார கால பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்பயிற்சியில் அமெரிக்க நாட்டின் அரசியல், அரசியல் அமைப்பு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அரசாங்க வெளிப்படைத்தன்மை, ஆட்சிமுறை, மக்களாட்சி தத்துவம் உள்ளிட்ட தலைமைப் பண்பிற்கு தேவையான அனைத்தும் கற்றுத்தரப்படும்.

ஐ.வி.எல்.பி, அதாவது சர்வதேச வருகையாளர்களின் தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி என்பது அமெரிக்க அரசின் Department of State’s Bureau of Educational and Cultural Affairs பணியகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தொழில்முறை பரிமாற்றத் திட்டமாகும்.

தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களுக்கு சர்வதேச அளவிலான அரசியல், தொழில், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் 5,000 தலைவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து அழைக்கப்படுகிறார்கள். மூன்று வார காலம் நடைபெறும் இப்பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் அமெரிக்க தூதரகத்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து தற்போதைய மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் (1960), இந்திரா காந்தி (1961), மொரார்ஜி தேசாய் (1962), பிரதமர் நரேந்திர மோடி (1993) உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்போது இப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு சிங்கை ஜி இராமச்சந்திரன் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கை ஜி.ராமச்சந்திரன் கோவை சிங்காநல்லூரில் பிறந்து, கோயமுத்தூர் பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டப் படிப்பையும், ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ பட்டப் படிப்பையும் முடித்தவர்.

இவர் 2016 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கோவை மண்டலச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜகவின் மாநில நிர்வாகி சூர்யா, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் இருந்து வருண், மற்றும் கர்நாடகா பாஜகவை சேர்ந்த சம்பத் ராமானுஜம் ( Elected Representative – Seegehalli) ஆகியோருக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூதரக பரிந்துரையின் பேரில் கோவை அரசியல்வாதி ராமச்சந்திரன் நாளை 27 ஆம் தேதி நள்ளிரவு அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார் .