பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து வெளியூருக்கு 190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் பகுதிக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி மார்க்கம் செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு 50 பேருந்துகள், தேனிக்கு 40 பேருந்துகள் என 190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன எனக் கூறினார்.