சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் – கோவை மாநகராட்சி

போக்குவரத்திற்கும் இடையூராக சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இதை தவிர்க்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000/- அபராதம் செலுத்தி மாட்டை பிடித்துச் செல்ல வேண்டும். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும்.

மேலும், பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.