குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்கள் 3 பேர் தேர்வு

புதுடெல்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குடியரசு தினவிழா நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவற்றில் அணிவகுப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நாட்டின் முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கான பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் படிக்கும் 3 மாணவர்கள் நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பாக தேர்வாகி உள்ளனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கோபி கிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அபர்ணா ஆகியோர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பிலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் ராகுல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 8 வது முறையாக நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று சாதனைப் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு்ள்ள மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி பாராட்டி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதல்வர் சித்ரா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், கேசவசுவாமி, சுபாஷினி ஆகியோர் பங்கேற்றனர்.