டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக பல இடையூறுகளை செய்வதாகவும், எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபிக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார்.

வாக்கெடுப்பில் ஆம் ஆத்மிக்கு மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 58 பேர் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் 4 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.