இலவசம் வேண்டாம் என்பவர்களே இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர்

– அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 15 ம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 24ம் தேதி கோவை வருகிறார்.

கோவையில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். முதலமைச்சர் கோவை வருவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வருகின்ற 23 ஆம் தேதி ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை வரவேற்க உள்ளனர். 24 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் கிணத்துகடவு பகுதியில் ஒரு லட்சத்து ஆறு ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி, புதிய திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து பொள்ளாச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

100 யூனிட் மின்சாரம் எளிய மக்களுக்காக வழங்கப்பட்டது. அதேபோன்று தான் மடிக்கணினி, சைக்கிள் முக்கியத்திட்டம். இலவசம் அடித்தட்டு மக்களை கைகோர்த்து அழைத்து செல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு.

இலவசத் திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருகின்றனர். இரட்டை வேசங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள்.

மேலும் முதல்வர் வருகைக்கு நாங்கள் கொடிகள் மற்றும் பேனர்கள் வைப்பது இல்லை என தெரிவித்த அவர், முதல்வருக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டியதுக்கு அந்த போஸ்டரின் மீது போஸ்டர் ஓட்டுவோம் என சொல்லுவது எப்படி என கேள்வி எழுப்பினார்.

மேலும் போஸ்டர் ஒட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் ஒரு கூட்டம் செயல்படுகிறது அவர்கள் மீது வழக்கு பதியப்படுள்ளது.

பாஜகவினர் தங்களின் இருப்பைக் காட்ட செயல்படுகின்றனர். இனிமேல் யாராவது கோவை மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவர்கள் கட்சியினர் கோவை வரும்பொழுது போஸ்ட் ஒட்டுகிறார்கள் அதை தடுக்கிறோமா என தெரிவித்த அவர் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.