கோவையில் ஆடி மாத குண்ட விழா – குவியும் பக்தர்கள்!

கோவை மேட்டுப்பாளையம் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது  மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலுக்கு  பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும் மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.இவ்வூர் மக்கள் ஒவ்வொரு மதமும் ஆடி குண்டமானது ஆடி மாதத்தில் கொண்டாடப் படுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் ஆடிக்குண்டம் திருவிழா ஜூலை மாதம் 19 ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி ஆடிக்குண்டம் திருவிழா இலட்சார்ச்சனை (இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு) மற்றும்  கிராமசாந்தியும் (கிராமத்தின் நன்மைக்காகக் கிராமதேவதைக்குச் செய்யும் சடங்கு) நடைபெற்றது.

அதை தொடர்ந்து மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பவானியாற்றில் இருந்து சிம்மவாகனம் பொறிக்கப்பட்ட கொடிமரம் திருவீதி உலாவுடன்  கோவிலை வந்தடைந்தது.கோவிலை சுற்றி வந்த பின்னர் மேள, தாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்  செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  இன்று அதிகாலை 3.00 மணியளவில் தொடங்கியது. அதை தொடர்ந்து அம்மன் அழைப்பு, திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆடி மாதத்தை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.