கோவையில் சிறுத்தை புலியை பிடிக்க நான்காவது நாளாக வனத்துறையினர் தீவிரம்

கோவையில் பாழடைந்த குடோனில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 4 வது நாளாக வனத்துறையினர் பொறி(கூண்டு) வைத்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிறுத்தை புலி நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் இன்றும் வெளியிட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை புலி கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தை புலியின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் நேற்றை தொடர்ந்து இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை புலி நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் அதிகாலை அளவில் சிறுத்தை புலி குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும் கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பவும் பதிவாகி உள்ளது.

கடந்த மூன்று தினங்கள் இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை புலி கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை புலி, புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலா வருகிறது.

இந்த சிறுத்தை புலி, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தை புலியால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர் ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தை புலியாக இருக்க கூடும் எனவும் சந்தேக்கின்றனர். மேலும் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை புலி காயமடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டும் வனத்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக காத்திருந்து அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.