தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில்,வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைகளின் செயல்பாட்டு நேரம் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.