படிக்கட்டில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை – போக்குவரத்துத் துறை

பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தொற்று குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பேருந்தில் வரும் சில மாணவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் ஆபத்தாகப் பயணிப்பது தொடர்பான வீடியோக்களும் இணையங்களில் பரவியது. மாணவர்கள் இது போன்று பயணிப்பதை தடுக்கும் வகையில் போக்குவரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “பள்ளி – கல்லூரிகளுக்கு அருகே பேருந்துகளை நிறுத்திச் செல்ல வேண்டும்.

அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களை முழுமையாகப் பேருந்தில் ஏற்றிச்செல்ல வேண்டும். மேலும் பேருந்தில் போதுமான இடத்தை மாணவர்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வழங்க வேண்டும்.

அதிகமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தால், அருகில் இருக்கும் கிளைக்குத் தகவல் தெரிவித்துக் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.