கோவையில் ரூ.241 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர்

கோவையில் ரூ.241 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர், மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படைத் தளம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

241 கோடி ரூபாய் மதிப்பில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 4 லட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு பயன்படும். இதன் மூலம் 2035 ஆண்டு வரை மக்களுக்கு பயன்படும். ஆர்.என்.ஐ வாங்கி கொண்டு பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கும் பத்திரிகை நிறுவனங்கள் குறித்து எழுத்து பூர்வமாக புகார்கள் வரும் போது நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிக்கையாளர் நல வாரியம் தமிழக அரசால் தொடங்கி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும். மேலும், ஆன்லைன் மீடியாக்களை முறைபடுத்துவது குறித்து தனி நபர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.