சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ” சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கபடுகிறது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இந்த விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.11.2021 ஆகும் என்பது தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்ணை அழைக்கலாம் : 0422-2300404
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.