ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை ஐடிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வானவூர்தி இயல் துறை மற்றும் கோவை ஐடிஐ உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லூரியின் ஆளில்லா வான்வழி வாகன ஆய்வுக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி சார்பாக முதல்வர் அலமேலு மற்றும் ஐடிஐ சார்பாக துணை இயக்குனர் செல்வராஜன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இவ்விரு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து ஆளில்லா விமானம் வடிவமைத்து உருவாக்குதல், அதனை எவ்வாறு இயக்குதல் மற்றும் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைக்கும் முறை பற்றிய செயல்பாடுகள் கவர்ந்திருக்கும்.

மேலும், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற யுகத்தில், பல்வேறு தொழில் தளங்களில் அமைக்கப் பெற்றிருக்கும் தொழில் நிறுவனங்களிலும், வணிக மையங்களிலும், ராணுவ படைகளிலும், தனிநபர்களின் கண்காணிப்பு ஆகியவற்றில் ஆளில்லா விமானத்தின் சேவை மற்றும் பயன்பாடுகள் இன்றியமையாததாகும். எனவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கூறிய தளங்களில், மாணவர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஏற்ப படிப்பு உள்ளடக்கங்கள் வடிவமைக்கப் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

விழாவிற்கு துறைத்தலைவர் டேவிட் ரத்தினராஜ், ஐடிஐ வேலை வாய்ப்பு அலுவலர் குணசேகரன், பயிற்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.