தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழி கருத்தரங்கு: உலக சாதனை முயற்சி

கொரோனா கால பேரிடர் காலத்தில் கல்வி, வர்த்தகம், தினசரி பணிகள், வங்கி பரிவர்த்தனை, கருத்தரங்குகள் போன்ற சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் இணைய வழியாக நடந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இணையவழியாக தொடர்ந்து 14 மணி நேரம் கருத்தரங்கு நடத்தி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை, அகிம்சை தின விழாவாக கொண்டாடும் விதமாக காந்தியமும் இன்றைய சமுதாயமும் எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கின் தொடக்க விழா இணையவழியாக நடைபெற்றது. அன்னை தெரசா மகளிர் பல்கலைகழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறை தலைவர் பிந்து மற்றும் பதிவாளர் ஹில்டாதேவி, ஆகியோர் வரவேற்புரை மற்றும் தொடக்க உரையாற்றினா்.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் வி.தாமோர் கலந்து கொண்டு நாட்டு நல பணி திட்டம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் ஐ.ஐ.சி.சி.ஐ.குளோபல் பிரசிடென்ட் முகம்மது சிராஜ் அன்சாரி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பதினான்கு மணி நேரம் இணையவழியாக சுமார் ஐநூறு பேர் கலந்து கொண்ட கருத்தரங்கில் பெண்கள் மேம்பாடு, புற்றுநோய் விழிப்புணர்வு, மன ஆரோக்கியம் மற்றும் அதன் முக்கயத்துவம், நுகர்வோர் பாதுகாப்பு, குடும்ப வன்முறை வரதட்சணை கொடுமை, மனித உரிமை, இயற்கை விவசாயம் என சமுதாய மேம்பாடு சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

காலை எட்டு மணி தொடங்கி இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடைபெற்ற இணையவழி கருத்தரங்கை நோபல் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் நோபள் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார்.